Monday, November 12, 2007

பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் ஜனநாயகம்

சர்ஜுன்
பாகிஸ்தானில் பெயரளவுக்கு இருந்த ஜனநாயகம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு அவசர நிலை பிரகடனம் செய்யப் பட்டிருக்கிறது. எதிர்ப்பவர்கள் எவரும் இன்றி அதிபர் தேர்தலில் முஷாரஃப் ஜனநாயக (?) முறையில் வெற்றி பெற்ற பின்னரும் கூட நடுங்கி நிதானம் இழந்து அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு ஜனநாயகம் என்பது எட்டாக்கனியாக இருந்தது மேலும் எட்டாத உயரத்தில் போய் விட்டது.

பாகிஸ்தான் என்றால் முஷாரஃப், பெனாசிர், நவாஸ்ஷரீஃப், அமெரிக்கா, தலிபான் ஆதரவாளர்கள் என்று கலவையான குழப்பம் என்ற நிலைமாறி பாகிஸ்தானில் மக்களின் ஜனநாயக விழிப்புணர்வு, நீதித்துறையின் சுறுசுறுப் பான செயல் பாடுகள் என மாறியதால் பழைய பாகிஸ்தானாக அது தற்போது இல்லை.

மதரஸா மாணவர்களிடையே இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசையே எதிர்க்கும் அளவிற்கு அவர்கள் சென்றனர்.

இஸ்லாமிய நெறியை பரப்ப, புரிந்து கொள்ள அவர்கள் காட்டிய விவேகமற்ற வேகம் சர்ச்சைக்குள்ளாகி லால் மஸ்ஜி தில் நூற்றுக்கணக்கான மாணவர்களின் உயிரைக் குடித்தது.

அரசும், மதரஸாக்களின் தலைமைப் பீடங்களும் நிதானம் இழந்து செயல் பட்டதின் விளைவு இரு தரப்புக்குமே தோல்வியாக முடிந்தது.
நீதித்துறையின் சுறுசுறுப்பான செயல் பாடு பாகிஸ்தான் மக்களுக்கு மட்டுமின்றி சர்வதேச அளவிலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இஃப்திகார் சவுத்ரி, நீதியை நிலை நாட்டும் முகமாக அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். ஆடித்தான் போனார் அதிபர் முஷாரஃப்.

பாகிஸ்தானின் மாற்றங்கள் ஏற்றங் களை நோக்கிச் சென்றாலும், தமது அதிகார வரம்புக்கு ஏமாற்றங்களையே பரிசாக அளிக்கும் என்பதை உணர்ந்து கொண்டார்.
பெனாசிருடன் வைத்துக் கொண்ட ரகசிய அதிகார பகிர்வு குறித்த உறவும் கராச்சி குண்டு வெடிப்பு சத்தத்தில் மாயமாய் மறைந்து போனது.

பாகிஸ்தானில் முஷாரஃபின் பிடி நழுவியதோடு இந்த துணைக் கண்டத் தில் அமெரிக்காவின் பிடி நழுவும் போக்கு நாளோருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் கூட்டமைப்பில் ரஷ்யா, சீனா, உஸ்பெ கிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகள் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தி இப்பிராந்தியத்தில் சீனாவும், ரஷ்யாவும் வலுப்பெறுவதை அமெரிக்கா வெளிப் படையாகக் கண்டு கொள்ளாதது போல் இருந்தாலும், உள்ளூர நடுக்கத்துடன் தன் கைவசம் உள்ள பாகிஸ்தானை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு பாகிஸ்தானின் ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்க மறைமுக காரண மாகவே மாறிவிட்டது.

இந்தியாவில் அணு ஆற்றல் ஒப்பந்தத் தில் மறைமுக அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா பாகிஸ்தானில் முஷாரஃபை கொம்பு சீவி விட்டிருக்கிறது விளைவு பாகிஸ்தான் ஜனநாயகம் அருங்காட்சி யகத்தில் வைக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது.

நாளை அது புதைபொருள் ஆராய்சிக் குரிய ஒன்றாக மாறக்கூடும்.
பாகிஸ்தானின் ஒற்றைத் தனி மனிதராய் முஷாரஃப் விளங்குகிறார். அவருக்கு ஆத்மார்த்தமான நட்பாக அதிபர் புஷ் மட்டுமே விளங்குகிறார். ஜனநாயகம் என்பது இவர்கள் இருவரின் நட்பு மட்டும் அல்லவே!

பாகிஸ்தான் இன்று எரிமலையாய் தகித்துக் கொண்டிருப்பதாகவே அங்கி ருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எரிமலையின் மேலிருந்து மகுடி வாசிக்கும் முஷாரஃபை நினைத்தால் பரிதாபம் ஏற்படுகிறது.

No comments: