Monday, November 12, 2007

ஆதம்பாலம் தானாக உருவான மணல் திட்டு - வரலாற்றுப் பேராசிரியர் ஏ.ராமசாமி பேட்டி

ஆதம்பாலம் தானாக உருவான மணல் திட்டு இராமர் கட்டியதாகக் கூறுவது கட்டுக்கதை வரலாற்றுப் பேராசிரியர் ஏ.ராமசாமி பேட்டி
சேது சமுத்திரம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தில் இருக்கும் ஆதம் பாலம் தானாக உருவானது தான்; அதில் மனிதர்கள் நடந்து சென்றதற்கான ஆதாரமே இல்லை என்று வரலாற்றுப் பேராசிரியரும், தமிழக உயர் கல்விக்குழுத் துணைத் தலைவருமான ஏ. ராமசாமி கூறினார்.

வங்கக்கடல் பகுதியில் இருந்து செல்லும் கப்பல்கள்; கேரளம் உள்ளிட்ட அரபிக் கடல் பகுதியை சென்றடைய இலங்கையை சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் காலவிரயம், பொருள் விரயத்தைத் தடுக்க இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே கால்வாய் (சேது சமுத்திரத் திட்டம்) அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், இத்திட்டத்துக்காக ஆதம் பாலம் அல்லது ராமர் சேது பாலம் என்றழைக்கப்படும் மணல் திட்டுக்களை அகற்றக்கூடாது என்று மதவாத சக்திகள் எதிர்க்கின்றனர். இந்த நிலையில் ஆதம்பாலம் குறித்து தமிழ்நாடு உயர் கல்விக்குழு துணைத் தலைவரும், வரலாற்று துறையில் டாக்டர் பட்டம் பெற்றவருமான ஏ. ராமசாமி ஆதம் பாலம் பற்றி ஆராய்ந்து, ஒரு தொகுப்பினை தயாரித்துள்ளார்.

அது குறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதற்காகத் தான் இது பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தோம். ஆதம் பாலம் என்ற ஒன்று எப்படி உருவானது; அது இருந்ததா? அந்த பாலம் ராமருடன் சென்றதாகக் கூறுப்படும் வானர சேனையால் கட்டப்பட்டதாக என்ற கோணத்தில் இந்த ஆய்வு மேற்கொண்டோம். ராமாயணம் பதினேழரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், ராமாயணம் நடந்த இடமாகக் கூறப்படும் அயோத்தியில் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கவில்லை; அங்கு வெறும் காடுகளே இருந்தது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறி இருக்கிறார்கள்.

3 கர்நாடக போர்கள் நிகழ்ந்ததற்குப் பிறகு, 1763 ஆம் ஆண்டில் ராபட்பாக் என்ற கவர்னர் பதவியில் இருந்தார். அவர் காலத்தில் ஆதம் பாலம் சர்ச்சை தொடங்கியது. அப்போது லெப்டினன்ட் வில்லியம் ஸ்டீவன்ஸ் என்ற ராணுவ என்ஜினீயர் ஒருவரை, தனுஷ் கோடி தலைமன்னாரை இணைக்கும் ஆதம் பாலம் எனப்படும் மணல் திட்டுக்களை பற்றி ஆய்ந்து வருமாறு பாக் உத்தரவிட்டார்.
அந்த ஆளுநரின் பெயராலேயே பாக் ஜலசந்தி என்று அப்பகுதி அழைக்கப் படுகிறது. அதுபோல், ஆங்கிலேய குழுவில் இருந்த ஆதம் என்ற ஆராய்ச்சியாளரின் பெயரால் ஆதம்பாலம் என்று அது அழைக்கப்பட்டிருக்கக்கூடும். இதுதான் விஞ்ஞான ரீதியாக அங்கு மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வு ஆகும்.இதுபோல், மனிதனின் தொண்டைக்கு அருகில் முன்கழுத்துப் பகுதியில் உள்ள உறுப்புக்கு ஆதம்ஸ் ஆப்பிள் என்று பெயர். இது தலையையும், உடலையும் இணைக்கும் முக்கிய பகுதி ஆகும். இதுபோல், இலங்கையையும், இந்தியாவையும் இணைக்கப்பதுபோல் இப்பாலம் உள்ளதால், 'ஆதம் பாலம் என்று பெயரிட்டு இருக்கலாம் என்று ஐதராபாத்தில் உள்ள மத்திய தொலையுணர்வு ஆய்வு நிறுவன அதிகாரி பெருமாள் கூறுகிறார்.

1891 ம் ஆண்டில் ஜெர்மனியை சேர்ந்த ஜோஹன்னாஸ் வால்டர் என்ற ஜெர்மானியர், தனக்கு முன்பு ஆய்வு செய்தவர்களின் குறிப்புகளை வைத்துக் கொண்டு ஆதம்பாலத்தை நேரடியாக பார்த்து ஆய்வு செய்தார். அவர், பருவகால மாற்றம், கடல் நீரோட்டம், கடற்கரையில் இருந்து வந்த மணல் திட்டுகள் உருவாயின, கடல்மட்டம் உயரும்போது அவை மறைந்துவிடுகின்றன; குறையும்போது திட்டுகள் மேலே வருகின்றன என்று கூறியுள்ளார். வால்மீகி ராமாயணத்தல் உள்ள வரிகளை விரிவாக குறிப்பிடும் அவர், ஆதம் பாலத்தை வானரர்கள் கட்டினார்கள் என்பது ஒரு கட்டுக்கதை என அவர் தனது புத்தகத்தில் கூறிப்பிட்டுள்ளார்.ஆதம் பாலம் என்பது மணல் திட்டுகளால் ஆன ஒன்று. அது நிரந்தரமானது அல்ல. அந்த காலத்தில் இலங்கையில் இருந்தும், இங்கிருந்தும் மன்னர்கள் கப்பலில்தான் இருநாடுகளுக்கும் சென்று வந்தார்கள்.

ராமர் பாலம் இருந்திருந்தால் அதிலேயே அவர்கள் சென்றிருப்பார்கள். சேது பாலத்தில் மனிதர்கள் நடமாடியதற்கான ஆதாரமே இல்லை. பிரிட்ஜ் என்றால் பாலம் என்று மட்டும் அர்த்தம் அல்ல. நிரப்புதல், இணைப்பு என்ற அர்த்தமும் உண்டு. அதனால் இணைப்புப் பகுதி என்ற அளவில், ஆதம் பிரிட்ஜ் என்றழைப்பதில் தப்பில்லை. ராமர் பாலம் என்றழைக்கப்படும் திட்டுகள் 32 ஆயிரம் மீட்டர் நீளம் உள்ளது. சேது சமுத்திரத் திட்டத்துக்கு 300 மீட்டர் மட்டுமே தேவைப்படுகிறது. இதனால் பெரிதாக பாதிப்பு ஒன்றும் ஏற்பட்டு விடாது. இவ்வாறு ராமசாமி கூறினார்.

No comments: